blogpost
அமேசான் நிறுவனத்தில் ரூ.1.3 கோடியை சுருட்டிய இளைஞர்

அமேசான் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் அந்நிறுவனத்தில் ரூ.1.3 கோடிக்கு மோசடி செய்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் சிக்மங்களூரு நகரில் அமேசான் நிறுவனம் தனது பொருட்களை டெலிவரி செய்து பணம் பெறுவதற்கு எக்தந்தா என்ற கூரியர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிறுவனத்திலிருந்து அமேசான் பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு அமேசான் நிறுவனத்திலிருந்து ஒரே டேப்லெட் மற்றும் கார்டு ஸ்வைப்பிங் மிஷன் ஆகியவைக் கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த எக்தந்தா கூரியரிலிருந்து அமேசானுக்காக டெலிவரி வேலை பார்க்கும் தர்ஷன் என்ற துருவா என்ற 25 வயது இளைஞர் அமேசான் இணையதளம் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட ரூ.1.3 கோடி மதிப்பிலான பொருட்களை நூதன முறையில் அபேஸ் செய்திருக்கிறார்.

சிக்மங்களூரில் உள்ள தனது நண்பர்கள் சிலர் மூலம் அமேசான் இணையதளத்தில் பல விலைமதிப்பு மிக்க பொருட்களை ஆர்டர் செய்யச் சொல்லிய அவர், அவற்றை டெலிவரி செய்யவும் தானே சென்றிருக்கிறார். பொருட்களை அவர்களிடம் கொடுத்துவிட்டு அதற்கான பணத்தைப் பெறாமலேயே பெற்றுக்கொண்டுவிட்டது போல, அமேசான் நிறுவனத்திற்கு ஒரே மெசேஜை தனக்கு அளிக்கப்பட்ட டேப்லெட் மூலமே செய்திருக்கிறார்.
இந்த மெசேஜ்களைக் கொண்டு பணம் செலுத்தப்பட்டுவிட்டதாக நம்பிய அமேசான் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்த காலாண்டு கணக்கை சரிபார்த்த போது, துருவா செய்த மோசடியைக் கண்டுபிடித்துள்ளது. செப்டம்பர் 2017 முதல் பிப்ரவரி 2018 வரை இந்த மோசடியை துருவா தன் நண்பர்கள் துணையுடன் செய்திருப்பது தெரிந்துள்ளது.

இது குறித்து பசவனஹள்ளியில் உள்ள காவல்நிலையத்தில் அமேசான் நிறுவன மேலாளர் ஒருவர் மார்ச் 8ஆம் தேதி புகார் கொடுத்துள்ளார். இதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் துருவா மற்றும் அவரது நான்கு நண்பர்களைக் கைது செய்துள்ளனர். மேலும், இரண்டு பேர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களைத் தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.